Pages

Thursday 19 September 2013

நானென்பது யாதென்பேன்..?

நானென்பது யாதெனப் 
புரியவில்லை...

தேடித் தேடிக் களைத்து
முதிர்ந்த மனக்காலத்தின்
ஒரு மூலையில்
பெருங்கேள்விக்குறியுடன்
விழித்துக் கிடக்கிறது அறிவு...

நானென்பது யாதென்பேன்..?

எனை வனைந்த அனுபவங்களா..?
மூளைத்திரட்சிகள் எங்கும்
நீந்திக்கொண்டிருக்கும்
நினைவுகளின் தொகுப்புகளா..?
படித்து முடித்த புத்தகங்களா..?
நம்பும் நம்பிக்கைகளின் சாயைகளா..?
ஜீன்களின் வழி புகுந்த
காலப்படுக்கைகளில் புதைந்துகிடக்கும்
மூதாதைகளின் கனவுகளா..?

சொல்லற்று நிற்கிறேன்...

விளங்க முடியாப் புதிராக
வெளியிலிருந்து பார்க்கையில்
வியப்பாய் விரிகிறது
"நான்"...

ஆயினும்..

விலக்கமுடியாமல்
வழமைபோல்
ஆயிரம் கேள்விகளாய்
மனக்கடலை நிறைக்கின்ற
இன்னுமொரு நாள் துவங்குகிறது..

மலைகளில் இருந்து
இறங்கி
பெருக்கெடுத்தோடும் அருவியாய்
கேள்விகள்...

தேடித்தேடி திரிகிறேன்..

பெருவெளியில்
கழிவிரக்கத்துடன் படர்ந்துகிடக்கும்
காலத்தைப்போலவே
புரிகின்றனவே இல்லை
நள்ளிரவில்
எனை எழுப்பும் கேள்விகள்..

அழகின் வடிவம்
ஒளிரும் இரவே
சொல்...

நானென்பது யாதென்பேன்..?

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... நல்ல கேள்விகள்...!

Anonymous said...

வணக்கம்
இன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.. வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/04/blog-post_27.html?showComment=1398555253279#c183587270891311459

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment